ஈரோடு, பிப். 26: ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளத்தில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் குளத்தை சுத்தப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளம் 30 அடி ஆழம் உடையது. தெப்பக்குளத்தினை சுற்றியும் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். மாரியம்மன் கோயிலில் திருவிழா முடிந்ததும், கம்பம் இந்த குளத்தில்தான் விடப்படும். கோயில் திருவிழா முடிந்துவிட்டதால், இந்த குளம் எவ்வித பராமரிப்பும் இன்றி கிடக்கிறது. கோடை சீசன் துவங்கி விட்டதால், தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், தெப்பக்குளத்தை சுற்றி வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம், அதனையொட்டியுள்ள கிணறுகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக துர்நாற்றம் வீசி வருகிறது. தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. இதில், தெப்பக்குளத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆமைகள் 2 செத்து மிதந்தன. அதனை மீன்களை திண்றுவிட்டதால், தற்போது ஆமையின் ஓடு மட்டும் மிதக்கிறது. தெப்பக்குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, மாசடைந்த தண்ணீரில் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குளத்தினை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.